கொத்துக்கறி என்றால் மட்டன்தான் நினைவுக்கு வரும். ஆனால் சிக்கனிலும் சுவையான கொத்துக்கறி செய்யலாம். சிக்கனை வேண்டாம் என்று ஒதுக்குபவர்கள்கூட, இந்த சிக்கன் கொத்துக்கறியை விரும்பி சாப்பிடுவார்கள். சாப்பாட்டுக்கு மட்டுமல்ல… தோசை, பரோட்டா, சப்பாத்திக்கும் சிறந்த சைடிஷாக அமையும்.
தேவையான பொருட்கள்:
- கோழிக்கறி (எலும்பு இல்லாதது) – அரை கிலோ
- வெங்காயம் – 2
- பூண்டு – 10 பல்
- இஞ்சி பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்
- கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
- முந்திரிப்பருப்பு – 50 கிராம்
- பட்டை – ஒன்று
- கிராம்பு – ஒன்று
- அன்னாசிப்பூ – ஒன்று
- உப்பு – தேவையான அளவு
- மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
- தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
கோழிக்கறியை சுத்தம் செய்து, கொத்தி வாங்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, தட்டி வைத்த பூண்டு, வெங்காயம், முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும்.
பின்பு, இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, கொத்தி வைத்துள்ள கோழிக்கறியையும் சேர்த்து நன்கு வதக்கி, சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி பத்து நிமிடம் குறைந்த தீயில் வைத்து, கோழி நன்கு வெந்தவுடன் தேங்காய்த்துருவல் கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைத்து இறக்கிப் பரிமாறவும்.
Leave a Comment