சேப்பங்கிழங்கு என்றால் சிலருக்கு பிடிக்காது. ஆனால் அதே சேப்பக்கிழங்கை புளிக்கூட்டாக செய்து கொடுங்கள். விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருள்கள்:
சேப்பக்கிழங்கு – 5
சாம்பார் பொடி – 1/2 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
புளி – நெல்லிக்காய் அளவு
அரைக்க:
தேங்காய் துருவல் – 4 மேஜைக்கரண்டி
சின்ன வெங்காயம் – 4
தாளிக்க:
எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 3
கறிவேப்பிலை – சிறிது
புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். தாளிக்க கொடுத்துள்ள வெங்காயத்தை சிறியதாக நறுக்கி கொள்ளவும். அரைக்க கொடுத்தவற்றை அரைத்து கொள்ளவும். குக்கரில் 1 1/2 கப் தண்ணீர் மற்றும் சேப்பங்கிழங்கை போட்டு அடுப்பில் வைக்கவும். நீராவி வந்ததும் வெயிட் போட்டு ஒரு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை ஆப் பண்ணவும்.
5 நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்து கிழங்கை எடுத்து சிறிது நேரம் ஆற விடவும். நன்கு ஆறிய பின் தோல் உரித்து வட்ட வட்டமாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு தாளிக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் அடுப்பை சிம்மில் வைத்து சாம்பார் பொடியைப் போட்டு ஒரு நிமிடம் கிளறவும். பின் புளித் தண்ணீர், சேப்பக்கிழங்கு, உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும். மசாலா வாடை போனதும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கூட்டு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். இது சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.