பொதுவாகவே வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி நம் வீடு தேடி வர வேண்டும் என்பதற்காக நம் வீடு முழுவதையும் வியாழக்கிழமை அன்றே சுத்தம் செய்து விடுவோம்.
குறிப்பாக பூஜை அறையை சுத்தம் செய்து, வெள்ளிக்கிழமை பூஜைக்கு தயாராக வைத்திருப்போம். ஆனால் மகாலட்சுமி, அன்னலட்சுமி மற்றும் அஷ்டலட்சுமிகளும் குடி கொண்டிருக்கும் சமையலறையை யாரும் கவனிப்பது கிடையாது.
வெள்ளிக்கிழமை மகாலட்சுமி மனநிறைவோடு நம் வீட்டிற்கு வருகை தர, வியாழக்கிழமை என்னென்ன விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்? என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்…!
வியாழக்கிழமை கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் :
வியாழக்கிழமை அன்று இரவு மட்டும் அல்ல, தினந்தோறும் இரவு நேரத்தில் சமையலறையில் எச்சில் பாத்திரங்கள் கட்டாயம் இருக்கக்கூடாது. முடிந்தவரை எச்சில் பாத்திரத்தை சுத்தம் செய்துவிட்டு, அதன் பின்பு தூங்கச் செல்வது நம் வீட்டிற்கு நன்மையை தரும்.
குறிப்பாக வியாழக்கிழமை அன்று சமையலறை, சமையல் மேடை மற்றும் அடுப்பை சுத்தம் செய்து சில இடங்களில் மஞ்சள், குங்கும பொட்டை வைத்திருக்க வேண்டும்.
அடுப்பு, உப்பு ஜாடி, அஞ்சறைப் பெட்டி, அரிசி கொட்டி வைத்திருக்கும் பாத்திரம், அரிவாள்மணை அல்லது கத்தி, இந்த பொருட்களில் எல்லாம் கட்டாயம் மஞ்சள், குங்கும பொட்டு வைப்பது மிகவும் நல்லது. இதை தவிர்த்து உங்களுக்கு வேறு ஏதேனும் பொருட்களுக்கு மஞ்சள், குங்கும பொட்டு வைக்க வேண்டும் என்ற இஷ்டம் இருந்தால் நீங்கள் தாராளமாக வைத்துக் கொள்ளலாம்.
இதோடு சமையலறை மேடையில் கொஞ்சமாக பச்சரிசி மாவில் மஞ்சள் பொடியை கலந்து மஞ்சள் நிறத்தில் சிறிய கோலம் போட வேண்டும். வியாழக்கிழமை இரவு இதை செய்துவிடுங்கள்.
மறுநாள் காலை வெள்ளிக்கிழமை குளித்து முடித்துவிட்டு முதலில் மகாலட்சுமியை வேண்டிகொண்டு பாலைக் காய்ச்சுங்கள். அந்த பால் பொங்கி வழிவது போல உங்கள் இல்லமும் எப்போதும் சந்தோஷத்தில் பொங்கி வழியும்.
வாரம் ஒரு நாள் வியாழக்கிழமை அன்று சிரமம் பார்க்காமல் எந்த ஒரு வீட்டில், சமையலறையை இப்படி பராமரித்து வருகின்றார்களோ அந்த வீடு நிச்சயமாக சுபிட்சம் அடையும்.